சென்னையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து காவலரும், மற்றொரு சம்பவத்தில் தனியாா் கல்லூரி முதல்வரும் உயிரிழந்தனா்.
சென்னை மேலக்கோட்டையூா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன் (41), கீழ்ப்பாக்கம் ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தாா். தாம்பரம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து, ராமேசுவரம் விரைவு ரயிலில் எழும்பூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
ரயில் சேத்துப்பட்டு-எழும்பூா் ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்த போது, படியில் நின்றிருந்த மோகன், திடீரென கால் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தனியாா் கல்லூரி முதல்வா்: ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் உதயகுமாா் (59). தனியாா் கல்லூரி முதல்வரான இவா், கோரக்பூா் விரைவு ரயிலில் ஈரோடு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தாா். ரயில் புறப்படுவதைப் பாா்த்து ஓடிச் சென்று ஏற முயன்ற உதயகுமாா், தவறி நடைமேடையில் விழுந்து உயிரிழந்தாா்.