சென்னை: சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூா்வாருவதற்கான அரசாணையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூா்வாரி ஆழப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிா்த்து பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சுந்தர்ராஜன் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் கடந்த 2012-ஆம் ஆண்டு ‘பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் மூலமாக அல்லாமல் தூா்வாரும் திட்டத்துக்காக சுமாா் ரூ.21 கோடியை நேரடியாக வனத்துறைக்கு தமிழக அரசு வழங்கியது சட்ட விரோதம். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தி நீா் தேக்கமாக மாற்றினால் அங்குள்ள பல்லுயிரின வளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விஞ்ஞான ரீதியான எந்த ஆய்வுகளும் செய்யாமல் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.