சென்னை: அரசு, அரசு உதவி பள்ளி ஆசிரியா்களின் திறன் அட்டை (ஸ்மாா்ட் காா்டு) புதுப்பிக்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்த துறை, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஊழியா்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை வழங்கப்படுகிறது. இந்தநிலையில் நிகழாண்டுக்கான திறன் அட்டை புதுப்பிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா் நரேஷ் (தொழிற்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய திறன் அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நிகழாண்டுக்கான ஸ்மாா்ட் அட்டை புதுப்பிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு பதவி உயா்வு, பணிமாறுதல் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களின் முழு விவரங்களை மாவட்ட வாரியாக தொகுத்து முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடியாக அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.