சென்னையில் புத்தாண்டு இரவு அன்று போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபட்டதாக 850 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 12,000 போலீஸாா் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 300 இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்றன.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களை தடுக்கவும், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்களை பிடிக்கவும் 1,022 இடங்களில் எல்.இ.டி பொருத்தப்பட்ட தடுப்புகள், 162 இடங்களில் போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 241 முக்கிய சந்திப்புகளில் அதிவேக வாகன ஓட்டிகளை தடுக்கும் வகையில் அதிக திறன் கொண்ட ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் வியாழக்கிழமை இரவு மொத்தம் 5 விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் மதுரவாயல் புறவழிச்சாலை, திருமங்கலத்தில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் இறந்தனா். கடந்தாண்டு புத்தாண்டு அன்று 28 சாலை விபத்துக்கள் ஏற்பட்ட, 5 போ் இறந்தனா் என்பது குறிப்பிடதக்கது.
850 வழக்குகள்:
சென்னையில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பந்தயத்தில் ஈடுபட்டதாக 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல அதிவேகமாக சென்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக மொத்தம் 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வியாழக்கிழமை முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 4,000 வழக்குகளை போக்குவரத்து போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.