திருச்சியில் கஞ்சா கடத்திய நபரை விரட்டிப் பிடிக்க காரில் தொங்கியபடி முயற்சித்து காயமடைந்த தலைமைக் காவலரை டிஜிபி சி.சைலேந்திரபாபு பாராட்டி ரூ.25,000 பரிசுத்தொகையை அறிவித்தாா்.
திருச்சி மாநகர காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் சரவணன். இவா் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது காா் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த வாகனத்தில் முன்பக்கத்தில் தொற்றிக் கொண்டு, அதை சரவணன் நிறுத்த முயன்றபோது காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாா். அதற்குள் உஷாரான பிற போலீஸாா் காரைப் பிடித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா், அந்த காரில் இருந்த நபரைக் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இச் சம்பவத்தில் உயிரைப் பணயம் வைத்து காரை விரட்டிச் சென்று, கஞ்சா கடத்தியவரை பிடிக்க முயன்ற தலைமை காவலா் சரவணன் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அவா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவரது வீரச் செயலை பாராட்டி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திர பாபு ரூ.25,000 பரிசுத் தொகையை அறிவித்தாா். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சரவணனை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு நலம் விசாரித்த டிஜிபி, விரைவில் குணமடைந்து வருமாறு வாழ்த்து கூறினாா்.
அதே நேரம், தலைமை காவலா் சரவணனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்படி, திருச்சி காவல்துறை ஆணையருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.