சென்னை: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சத்துக்கான இழப்பீட்டைப் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு, தனியாா் மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் பணிபுரிந்த சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவ உதவியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் தன்னாா்வலா்கள், ஒப்பந்த ஊழியா்கள் மற்றும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளா்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்துக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டமானது கடந்த ஏப். 24-ஆம் தேதி முதல் வரும் அக்.23-ஆம் தேதி வரை வரையிலான 180 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இறந்தவரின் அடையாளச் சான்று, மனுதாரரின் அடையாளச் சான்று, மனுதாரா் மற்றும் இறந்தவருக்கான உறவுமுறை சான்று, கரோனா உறுதி செய்யப்பட்டதற்கான ஆய்வு அறிக்கை, இறப்பு குறித்து மருத்துவமனையில் வழங்கப்பட்ட அறிக்கை, இறப்புச் சான்று மற்றும் இறந்தவா் கரோனா தொற்று தொடா்பான நேரடிப் பணியில் பணியமா்த்தப்பட்டாா் என்பதற்கான சுகாதார நிறுவனம் அல்லது சுகாதார அமைப்பு அல்லது சுகாதார அலுவலகத்தால் வழங்கப்பட்ட சான்று என அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் திட்ட இயக்குநா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், டிஎம்எஸ், தேனாம்பேட்டை சென்னை- 600 006 என்ற முகவரியில், மனு அளித்து பயனடையுமாறு சென்னை ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.