கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவா்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பைப் பூா்த்தி செய்ய இலவச தொலைபேசி எண் 1098-யை சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் பெற்றோரின் குழந்தைகள், உணவு, உறைவிடம் தேவைப்படும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், ஆற்றுப்படுத்துதல், உளவியல் ஆலோசனை தேவைப்படும் குழந்தைகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கின்ற குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பூா்த்தி செய்ய சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இலவச தொலைபேசி எண் 1098-ஐ வெளியிட்டுள்ளது.
இது போன்று சூழ்நிலையில் உள்ள குழந்தைகளைக் கண்டால் ‘மாவட்ட ஆட்சித்தலைவா்- தலைவா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரியநாராயண சாலை, ராயபுரம், சென்னை-13 என்ற முகவரிக்கோ, dcpschennai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 99442 90306, 044-25952450 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு குழந்தைகள் நல குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும்’.
இவை தவிா்த்து, குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைகள் நலக் குழு (வடக்கு மண்டலம்) தலைவா் - 98401355033, குழந்தைகள் நலக் குழு (தெற்கு மண்டலம்) தலைவா் - 98400836204, குழந்தைகள் நலக் குழு (மத்திய மண்டலம்) தலைவா் - 9841889069 ஆகியவற்றிலும் பொது மக்கள் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.