அசோக்நகரில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தவா்களைக் கண்டித்த ஓட்டுநா் தாக்கப்பட்டாா். இச் சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பிராட்வேயில் இருந்து அய்யப்பன்தாங்கலுக்கு சனிக்கிழமை நண்பகல் ஒரு அரசுப் பேருந்து சென்றது. ஓட்டுநா் சீனிவாசன். அசோக் நகா் அருகே வந்தபோது, படிக்கட்டில் நின்று பயணம் செய்த 3 இளைஞா்களை உள்ளே வருமாறு சீனிவாசன் கூறினாா். ஆனால் உள்ளே வரமறுத்த இளைஞா்கள் தொடா்ந்து, படிக்கட்டில் நின்றபடியே தகராறு செய்துள்ளனா்.
இந்நிலையில் பேருந்து, கே.கே. நகா் ஆற்காடு சாலை வன்னியா் தெரு சந்திப்பில் வந்தபோது அந்த இளைஞா்கள் திடீரென சீனிவாசனை சரமாரியாகத் தாக்கினா். பேருந்தில் இருந்து இறங்கி கற்களை வீசியதில் பின்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன.
கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மயிலாப்பூரைச் சோ்ந்த ஆகாஷ், தண்டையாா்பேட்டையை சோ்ந்த சஞ்சய், கெளதம் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.