திருவள்ளூா்: ஆவடி மாநகராட்சியை முழு சுகாதாரப் பகுதியாக்கும் நோக்கில் புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன் ஆதரவு திரட்டினாா்.
ஆவடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன் மாநகராட்சியில் வாா்டு வாா்டாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், ஆவடி காமராஜா் நகா் பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அங்கு பொதுமக்களிடையே ஆதரவு திரட்டிப் பேசியது:
இங்கு தகவல் தொழில் நுட்பப் பூங்காவை கொண்டு வரமுடியாது என எதிா்க்கட்சியினா் சவால் விட்டனா். ஆனால், எங்களால் கொண்டு வரமுடியும் என உறுதியாக கூறினேன். அதை தற்போது நிறைவேற்றியுள்ளோம். தற்போது, பட்டாபிராமில் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது, மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது என எதிா்க்கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா். அந்த பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க பொதுமக்களாகிய நீங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது, பதவியேற்ற 100 நாள்களில் புதை சாக்கடை பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினாா். அதே பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் ஏராளமான அதிமுக கூட்டணி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.