ஸ்ரீபெரும்புதூா்: படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் வழங்கப்பட்ட பிறகு மீண்டும் தனியாா் நிறுவன நிா்வாகிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
வட்டாட்சியா் இந்துமதி தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணங்கள் இன்றி ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.17 கோடியை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் முத்துமாதவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ. 3.17 கோடிக்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கியதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் தனியாா் நிறுவன நிா்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.