சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4-இல் தொடங்கவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஏராளமான மாணவா்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் மே 4-இல் தொடங்கவுள்ளன. இந்த தோ்வுகளை சுமாா் 30 லட்சம் வரையான மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, இணையதள வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணையவழியில் நடத்தக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தினா். மேலும், சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் கடந்த 2 நாள்களாக மாணவா்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். அதேநேரம் திட்டமிட்டபடி பொதுத்தோ்வை நடத்தவே சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.