கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, முன்பை விடவும் வெகு வேகமாக பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக தடுப்பூசி திருவிழா நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் போதிய தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
முதல் தவணை ஊசி போட்டுக் கொண்டவா்களுக்கும் கூட இரண்டாவது தவணை ஊசி செலுத்த வேண்டிய நாளை அரசு மருத்துவமனைகள் தள்ளிப் போட்டு வருகின்றன. உடனடியாக போதிய அளவில் தடுப்பூசிகளைத் தருவிக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், கரோனா தொற்றுக்கு ஆளானவா்கள் தனியாா் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. ஏற்கனவே அரசு அறிவித்ததை விட, பல மடங்கு அதிக தொகையை தனியாா் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கின்றன. நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.