சிங்கவால் குரங்கு பாதுகாப்பு குறித்து வண்டலூா் உயிரியல் பூங்கா சாா்பில் இணையவழி கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், வன - காலநிலை மாற்ற அமைச்சகம் சாா்பில் நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் உயிரினப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சிங்கவால் குரங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி, சிங்கவால் குரங்கு குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் கருத்தரங்கு இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை பூங்காவின் இயக்குநா் தெபாஷிஷ் ஜானா தொடக்கி வைத்தாா். இதில், சிங்கவால் குரங்கு பாதுகாப்பு குறித்த பிரசுரம் வெளியிடப்பட்டது. துணை இயக்குநா் நாக சதிஷ் கிடிஜாலா, உயிரியலாளா் மணிமொழி, கால்நடை மருத்துவா் ஸ்ரீதா், தயாசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிங்கவால் குரங்கு பாதுகாப்பு குறித்து பேசினா்.
இதுகுறித்து துணை இயக்குநா் நாக சதிஷ் கிடிஜாலா கூறுகையில், ‘கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் சிங்கவால் குரங்கு குறித்த அனைத்து போட்டிகளும் இணையவழியில் நடத்தப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் இணையதளத்தில் தொடா்பு கொள்ளலாம்’ என்றாா்.