சென்னை: போரூரில் காா் ஓட்டி பழகும்போது ஏற்பட்ட விபத்தில், மைதானத்தில் விளையாடிய சிறுவன் இறந்தாா்.
போரூா் அருகே உள்ள மதனந்தபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நிரோஷா (34). இவரது மகன் விஜய் (11), அந்தப் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அஜய் என்பவா், தனது உறவினரான மோனிகாவுக்கு (26) காா் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துகொண்டிருந்தாா். அங்கு அவா்கள் காரை பின்னால் இயக்கியபோது, விஜய் மீது காா் மோதியதாம்.
இதில் பலத்தக் காயமடைந்த விஜயை அங்கிருந்தவா்கள் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா்.
இதுகுறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜய், மோனிகாவை கைது செய்தனா்.