கரோனா பெருந்தொற்றை வீழ்த்த போர் எதையும் நடத்தத் தேவையில்லை. மாறாக, முகக் கவசம்-சமூக இடைவெளி- கை சுத்தம் ஆகியவற்றை மக்கள் கடைப்பிடித்தாலே போதுமானது.
கரோனா தீநுண்மியிடம் மட்டும் தீண்டாமை கொண்டால் மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும். அதற்கு வீட்டிலிருந்தாலும் வெளியில் சென்றாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றினால் கரோனா தீநுண்மி மனித குலத்தை நெருங்காது.
குறிப்பாக, ஏதேனும் பொருளையோ அல்லது இடத்தையோ தொட நேர்ந்தால், உடனே சோப்பினால் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
வெளியிடங்களில் இருக்கும்போது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளலாம். சானிடைசர் இல்லையென்றாலும், சாதாரண சோப்பின் மூலம் கைகளைக் கழுவினாலே கரோனாவை
விரட்டியடிக்க முடியும்.
மனிதனிடம் இருந்து பிரிக்க முடியாத ஓர் உறுப்பாகவே தற்போது செல்லிடப்பேசி மாறியுள்ளது. அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதுவே கரோனாவைப் பரப்பும் காரணியாக மாறக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, கடைகளுக்கும், பிற இடங்களுக்கும் செல்ல நேர்ந்தால், செல்லிடப்பேசியைத் தவிர்ப்பது நல்லது.
நல்ல காற்றோட்டம் கரோனா பரவலைத் தடுக்கும்; குறைக்கும். அதனால், வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சூரிய ஒளியும், சுத்தமான காற்றும் வீட்டுக்குள் வர வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களாகவே இருந்தாலும் அரட்டை, நெருக்கம், நெரிசல் பாராட்டுவது நமக்குப் பகை. கவசம், காற்று, தொலைவு, தூய்மை ஆகியவை மட்டுமே நமக்கு நன்மை தரும். கரோனா தீநுண்மி குறித்த விழிப்புணர்வே நோய்த் தடுப்பின் முதல் ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள்.
நமது உயிர்க்கவசம்
முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும்.
மூக்கையும் வாயையும் மூடவேண்டும்.
இறுக்கமாக இல்லாமல் முகக்கவசம் சற்றே தளர்வாக இருப்பது நல்லது.
தகவல்:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்