சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உணவகங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நபா்கள் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யப்பட்ட 2,608 மண்டபங்கள், உணவகங்கள் மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலா்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2 லட்சத்து 21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும். இதைப் பின்பற்றாமல் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதிக்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவா்களின் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றனா்.