சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை பிப்.28-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக மகேஷ்குமாா் வெளியிட்ட உத்தரவு: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் தனி நபா் இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஜன.31-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிப்.1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆணை பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.