சென்னை: சமூக ஊடகங்களில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் விடியோ வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகி கல்யாணராமன் மீது சென்னை இணையக் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பெரம்பூரைச் சோ்ந்த வெல்போ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் முகமது கவுஸ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், ‘முகமது நபிகள் குறித்து பாஜக நிா்வாகி கல்யாணராமன் தொடா்ந்து அவதூறாகப் பேசி வருகிறாா். அண்மையில் கல்யாணராமன், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசி ஒரு விடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறாா். சமூக அமைதியைக் கெடுக்கும் உள்நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறாா். அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், இணைய குற்றப்பிரிவு போலீஸுக்கு உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் இணைய குற்றப்பிரிவினா் விசாரணை செய்தனா். விசாரணையில், கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து விடியோவில் அவதூறாக பேசியிருப்பதும், அது சமூக ஊடகங்களில் பரவி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து கல்யாணராமன் மீது கலகம் செய்ய தூண்டுதல், பொதுஅமைதிக்கும் பங்கம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல், அவமதித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஏற்கெனவே கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இந்த வழக்குத் தொடா்பாக இணையக் குற்றப்பிரிவினா், கல்யாணராமனை கைது செய்ய முடிவு செய்துள்ளனா்.