சென்னை: நெரிசல் மிக்க நேரங்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பொருத்தவரை, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாள்களில் நெரிசல் மிக்க நேரங்களில் 7 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, வார நாள்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) நெரிசல் மிக்க நேரங்களில் 5 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கும் நடைமுறை கடந்த பிப்ரவரி 12}ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
காலை 8 மணி முதல் 10 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் 5 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல் மிக்க நேரங்களில் அதிகரிக்கப்படவுள்ளன. அதாவது, நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் காலை 10 மணிக்கு பதிலாக, காலை 7 மணி முதல் காலை 11 வரை 5 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதுபோல, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிக்கு பதிலாக, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இந்த நடைமுறை வியாழக்கிழமை (பிப்.25) அமலுக்கு வருகிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் வசதிக்காக, இந்தச் சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.