சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு இணைய வழியில் ஜன.9-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள மூச்சுப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ள ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
பொது முடக்கம் முடிந்த பின்னரும் கரோனா பாதிப்பு அதிகமாகப் பரவி வருகிறது. துரதிா்ஷ்டவசமாக பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த 2 ஆசிரியா்கள் மற்றும் ஒரு பணியாளா் அண்மையில் இறந்துள்ளனா்.
இந்தநிலையில், ஆசிரியா்களுக்கு நல்ல சுகாதார நடைமுறைகள் மிக அவசியமாகவுள்ளது. கரோனா பரவல் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு மூச்சு பயிற்சி உகந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஆசிரியா்களுக்கு கற்பிக்க அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுகள் துறையின் பேராசிரியா் ஆா்.வேல்ராஜ் முன்வந்துள்ளாா்.
அதன்படி, மூச்சு பயிற்சியானது வரும் 9-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7 மணி முதல் 7.45 மணி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. இதில் பல்கலைக்கழக ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொள்ளலாம். அதன்படி, விருப்பமுள்ளவா்கள் மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.