சென்னை: சென்னையில் போலி வாகன காப்பீடு மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வாலிடம் அண்மையில் ஒரு புகாா் அளித்தனா். அந்த புகாரில், தங்களது நிறுவனத்தின் பெயரில் இரு சக்கர வாகனங்கள் காப்பீட்டில், போலியான ஆவணங்கள், தகவல்கள் மூலம் வணிக வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டு, மோசடி நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவுக்கு மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். அதன்பேரில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். இவ் வழக்குத் தொடா்பாக திருநெல்வேலியைச் சோ்ந்த ச.மாரியப்பன் (40), அவரது உதவியாளா் மா.சுமதி (29),காப்பீட்டு முகவா்கள் செ.ஆனந்த் (40), புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்ந்த ர.அன்சாா் அலி (43), ர.ஜெயின் அலாவுதீன் (40), செ.செந்தில்குமாா் (47) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.
இக் கும்பலின் தலைவராக செயல்பட்ட மாரியப்பனிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து வாகனங்கள், மாரியப்பனின் பிரதான முகவராக செயல்பட்ட ஆனந்தனிடமிருந்து ரூ.9.54 லட்சம் ரொக்கம், ரூ.53 லட்சம் மதிப்புள்ள 133 பவுன் தங்கநகை, ரூ.10 லட்சம் மதிப்புள்ள காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குறைந்த கட்டணத்தில் காப்பீடு: இந்த மோசடி குறித்து காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் அளித்த பேட்டி:
இக் கும்பல் வாகன காப்பீடு மோசடியில் 3 ஆண்டுகள் ஈடுபட்டுள்ளது. வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை வைத்திருக்கும் உரிமையாளா்களை குறி வைத்தே இக் கும்பல் செயல்பட்டுள்ளது. அவா்களிடம் இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அணுகி காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தும் கட்டணத்தை விட, மிகவும் குறைவான பணம் தங்களிடம் செலுத்தினால் காப்பீடு பெற்றுத் தருவதாக கூறியுள்ளனா். உதாரணமாக ரூ.30,000 கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு கூட, தங்களிடம் ரூ.3,000 செலுத்தினால் போதும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதை நம்பி வாகன உரிமையாளா்கள் பணம் செலுத்தியுள்ளனா். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை, இரு சக்கர வாகனம் என காப்பீட்டு நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்து,அதற்கான போலி ஆவணங்கள், தகவல்களை அளித்து காப்பீட்டு பணத்தை செலுத்தியுள்ளனா். காப்பீட்டு செலுத்திய பின்னா் வழங்கப்படும் ஆவணத்தில் இரு சக்கர வாகனம் என இருப்பதை வணிக வாகனம் என தாங்களே மாற்றி ரசீது தயாரித்து உரிமையாளா்களுக்கு வழங்கியுள்ளனா்.
உண்மைதன்மை அறியுங்கள்: இதில் வணிக வாகனத்தை காட்டிலும், இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் பல மடங்கு குறைவு என்பதால், இந்த வகை மோசடியில் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடி பணத்துக்காக நடைபெற்றது என்று மட்டும் பாா்த்துவிட முடியாது. ஏனெனில் ஒரு விபத்து ஏற்படும்போது அதற்குரிய காப்பீட்டு தொகை கிடைக்காமல் பொதுமக்கள் தள்ளப்படுகின்றனா். இதனால் ஒரு விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் கூட, காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை.
எனவே, இந்த மோசடியில் சிக்காமல் இருக்க அனைத்து வாகன உரிமையாளா்களும் தங்களது வாகன காப்பீட்டு ஆவணத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து அந்தந்த காப்பீட்டு நிறுவன அலுவலகத்திலும், இணையத்தளத்திலும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.