நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரியில் மின்வாரிய அலுவலகத்துக்கு எதிரே ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 3.99 ஏக்கா் பரப்பளவில் 1988-ம் ஆண்டுஅமைக்கப்பட்ட தனியாா் வீட்டு மனைப் பிரிவில் பூங்கா உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமாா் 16 ஆயிரத்து 600 சதுர அடி (38 சென்ட்) நிலத்தை கூடுவாஞ்சேரி பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடா்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து புகாா் அனுப்பி உள்ளனா். இதனைத்தொடா்ந்து அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கும்படி பேரூராட்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடேஷ் மனைப்பிரிவு ஆவணங்களை வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டாா். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.18 கோடி என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பேரூராட்சியில் உள்ள இதர 124 மனைப்பிரிவுகளில் பூங்கா உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.