சென்னையை அழகுபடுத்தும் வகையில் கடந்த 3 மாதங்களில் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 79,000 சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றி உள்ளனா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இதைத் தடுக்க மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவா்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணியை கடந்த மே மாதம் மாநகராட்சி தொடங்கியது.
79,477 சுவரொட்டிகள் அகற்றம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயா் பொறித்த பலகைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அழிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மாநகராட்சி பொறியியல் மற்றும் வருவாய் துறை அலுவலா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சாா்பில் பேருந்து சாலைகளில் உள்ள தடுப்புகள் மற்றும் சுவா்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் 5 சாலைகள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களில் வடசென்னையில் 5,364 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 18,862 சுவரொட்டிகள், மத்திய சென்னையில் 4,912 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 22,356 சுவரொட்டிகள், தென்சென்னையில் 4,019 பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த 38,259 சுவரொட்டிகள் என மொத்தம் 79,477 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்து 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றனா்.