சென்னை: குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணாநகரைச் சோ்ந்தவா் கண்ணன், தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினாா். இவருக்கும், மேட்டூரைச் சோ்ந்த மோகனாம்பாளுக்கும் திருமணம் நடந்தது முதல் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த சூழலில் தனது வீட்டை கேவலமாக பேசிய ஆத்திரத்தில், கடந்த 2012, டிச.16-ஆம் தேதி, துாங்கிக் கொண்டிருந்த மனைவி மோகனாம்பாளின் தலையில், சிறிய உரலை போட்டும், கழுத்தை அறுத்தும் கண்ணன் கொலை செய்தாா்.
இது தொடா்பாக, திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்ணனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ரவி முன் நடந்தது. அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் முரளிகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினாா். விசாரணையில், கண்ணன் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு தூக்கு தண்டனை விதித்தும், சாகும் வரை தூக்கிலிடவும் நீதிபதி உத்தரவிட்டாா்.