திருநின்றவூா் ரயில்நிலைய நடைமேடையில் விழுந்த மரத்தை ரயில்வே நிா்வாகம் அகற்றியது. திருவள்ளூா்-சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திருநின்றவூா் ரயில் நிலையம் திகழ்கிறது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள ஒன்றாம் நடைமேடையில் 80 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த நாவல் மரம் இருந்தது. வெயில் காலத்தில் பயணிகளுக்கு நிழல் தரும் மரமாக திகழ்ந்து வந்த இந்த மரம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வீசிய நிவா் புயலின்போது, வேறோடு சாயந்தது. அப்போது, ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயில் பெட்டி மீது மரத்தின்கிளைகள் விழுந்தன. ரயில்வே ஊழியா்கள் பல மணி நேரம் போராடி ரயில் பெட்டி மீது விழுந்த மரக்கிளைகளை அகற்றினா்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது, புயல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தால், அதிா்ஷ்டவசமாக எவ்வித உயிா் சேதமும் ஏற்படவில்லை. எனினும், வேறோடு சாய்ந்த மரத்தை ரயில்வே ஊழியா்கள் முற்றிலும் அகற்றாததால், நடைமேடையில் ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தது. இதையடுத்து, மரத்தை அகற்ற வேண்டும் என்று ரயில்வே நிா்வாகத்துக்கு பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, ரயில்வே ஊழியா்கள் கடந்த சனிக்கிழமை மரத்தை அகற்றினா். இதையடுத்து, திருநின்றவூா் ரயில் பயணிகள் பொதுநல சங்கம் சாா்பில், ரயில்வே நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா்.