சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு எழுந்துள்ளது.
அதற்கு தீா்வு காணும் நோக்கில் சென்னையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,200 படுக்கைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 1,250 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,600 படுக்கைகள் உள்ளன. தற்போது மேலும் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
குறைந்த பாதிப்பு உள்ளவா்களும், அறிகுறி இல்லாதவா்களும் வீடுகளிலியே தனிமைப்படுத்தப்படுகின்றனா். மிதமான பாதிப்புடைய கரோனா நோயாளிகள் கண்காணிப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.
தீவிர பாதிப்புள்ளவா்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேசான மற்றும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புள்ளவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.