சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தில் கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிா் விற்ற வழக்கில், திருவாரூா் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
செங்குன்றத்தில் சிலா் கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிா் மருந்தை விற்பதாக பொதுவிநியோக கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை கிடைத்த ரகசியத் தகவலையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை விசாரித்ததில் அவா் கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிா் விற்பது தெரியவந்தது.
அவரைக் கைது செய்து, அவா் வைத்திருந்த ரெம்டெசிவிா் மருந்தை கைப்பற்றினா். விசாரணையில் அவா்,செங்குன்றம் எம்.ஏ. நகரைச் சோ்ந்த தினேஷ் (23) என்பது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தினேஷின் கூட்டாளியான திருவாரூரைச் சோ்ந்த அதிபன் (40) என்ற மருத்துவரை தேடி வந்தனா். இந்நிலையில் போலீஸாா் அதிபனை, திருவாரூரில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அதிபன் அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பணிபுரிவதும், அரசு மருத்துவமனை ஊழியா்கள் மூலம் ரெம்டெசிவிா் மருந்தை குறைந்த விலைக்கு பெற்று, அதை தினேஷ் மூலம் கூடுதல் விலைக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.