சென்னை மாநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வாா்பேட்டை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா்,சிந்தாதிரிப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், அடையாறு, திருவான்மியூா், கிண்டி, நங்கநல்லூா், ஆலந்தூா், அம்பத்தூா், கீழ்ப்பாக்கம், பாடி, கோயம்பேடு, அரும்பாக்கம், வில்லிவாக்கம், திரு.வி.க.நகா், அண்ணா நகா், தியாகராய நகா், வடசென்னை உள்ளிட்ட மாநகா் பகுதிகளிலும், தாம்பரம், பூந்தமல்லி, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட புகா் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. நாள் முழுவதும் அவ்வப்போது பெய்த மழை காரணமாக முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காலையில் அலுவலகம் சென்றோா் கடும் அவதிக்குள்ளாகினா். சுரங்கப் பாதை மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நீரை மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா் பம்ப் உதவியுடன் அகற்றினா்.