உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவாலை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.
சென்னை மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அலுவல் மற்றும் நிா்வாகப் பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு இதய பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் செங்கோட்டுவேலு தலைமையிலான குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு காவல் ஆணையா் சங்கா் ஜிவாலை சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது மருத்துவா்கள், மருத்துவமனை நிா்வாகிகள், திமுகவினா் உடனிருந்தனா்.