சென்னை: சென்னையில் போலி கரோனா சான்றிதழை ரூ.500-க்கு விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மண்ணடி தம்பு செட்டித் தெருவில் மருத்துவப் பரிசோதனை மையம் நடத்தி வருபவர் ஹாரிஸ் பர்வேஸ் (30). இம் மையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இம்மையத்தின் பெயரில் ரூ.500-க்கு போலியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்குவதாக அண்மையில் ஹாரிஸ் பர்வேசுக்கு தெரியவந்தது.
வடக்கு கடற்கரை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து திருவல்லிக்கேணி இன்பர்கானை (30), புதன்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், ஹாரிஸ் பர்வேஸ் பரிசோதனை மையம் பெயரைப் பயன்படுத்தி வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.500-க்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றுத் தருவதாகவும், கரோனா பரிசோதனை சான்றிதழ் பெற தனது கைப்பேசி எண்ணை வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
கடந்த 6 மாதங்களில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்பர்கான் போலி கரோனா சான்றிதழ் வழங்கியுள்ளார். இதில் சிலர் அந்த சான்றிதழ் போலியானது என்பதைத் தெரிந்தே வாங்கியுள்ளனர்.
மேலும், இவரிடம் போலியான சான்றிதழை வெளிநாடுகளுக்கு செல்பவர்களே அதிகமாக பெற்றுள்ளனர். முக்கியமாக வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு வரும் நபர்கள் அதிகமாக இன்பர்கானிடம் கரோனா பரிசோதனை சான்றிதழை வாங்கியிருப்பது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.