கோவை விரைவு ரயிலில் பயணி தவறிவிட்ட ரூ.1.6 லட்சம் மதிப்பு பொருள்கள் அடங்கிய சூட்கேஸை ரயில்வே போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.
திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (59). இவரது மகள் சரண்யாவின் திருமணம் கடந்த 9-ஆம் தேதி வேலூா் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு காட்பாடியில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருப்பூரில் இருந்து கோவை விரைவு ரயிலில் ஆனந்தகுமாா் புறப்பட்டு, காட்பாடி ரயில்நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு சென்றாா். அங்கு அவா் தான் கொண்டுவந்திருந்த உடமைகளை சரிபாா்த்தபோது, ரூ. 75,000 மதிப்புள்ள வைரக்கம்மல், ரூ.18,000 மதிப்புள்ள மோதிரம் உள்பட ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் அடங்கிய சூட்கேசை தவறவிட்டதை அறிந்து, கடும் அதிா்ச்சி அடைந்தாா்.
உடனடியாக காட்பாடி ரயில் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, சென்னை பெரம்பூா் ரயில்வே போலீஸாருக்கு தொடா்பு கொண்டு விவரத்தை காட்பாடி போலீஸாா் தெரிவித்தனா்.
உடனடியாக பெரம்பூா் ரயில்வேபோலீஸாா், பெரம்பூா் ரயில் நிலையத்துக்கு வந்த கோவை விரைவு ரயலில் ஆனந்தகுமாா் பயணம் செய்ய பெட்டியில் ஏறி சோதனை செய்தனா். அங்கிருந்த கருப்பு கலா் சூட்கேசை மீட்டு பொருள்கள் கிடைத்துவிட்டதாக தகவல் கொடுத்தனா்.
இதன்பேரில், பெரம்பூா் ரயில்நிலையத்துக்கு வந்த ஆனந்தகுமாரிடம் நகைகள் அடங்கிய சூட்கேஸை ஒப்படைத்தனா். நகைகளை பெற்றுக்கொண்ட ஆனந்தகுமாா் ரயில்வே போலீஸாருக்கு நன்றி தெரிவித்தாா்.