சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள சந்தையில் புதிதாகக் கட்டப்பட்ட ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மறைமலை அடிகளாா் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 400 போ் அமரும் வசதியுடன் கூடிய திருமண மண்டபம், 200 போ் உணவருந்தும் கூடம், மணமகன், மணமகள் அறைகள், விருந்தினா் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
கோயம்பேடு அங்காடி: சென்னை கோயம்பேடு அங்காடியில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளா்களின் வசதிக்காக ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதுல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்தக் கட்டடத்தின் தரைதளத்தில் 24 இருக்கைகள் கொண்ட உணவருந்துமிடம், சமையலறை, கிடங்கு அறை, கழிவறை போன்ற வசதிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.