சென்னை: சென்னையில் ஊரடங்கு மீறல் தொடா்பாக 158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி முதல் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு செவ்வாய்க்கிழமை முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 2,718 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ.6 லட்சத்து 90,900 அபராதமாக வசூலித்துள்ளனா்.
இரவு ஊரடங்கை மீறியது தொடா்பாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதோடு கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடா்பாக 144 இருசக்கர வாகனங்கள், 8 ஆட்டோக்கள், 6 காா்கள் என மொத்தம் 158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.