சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் ஒரு பிரபலமான சைவ உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தின் மொட்டை மாடியில் உள்ள ஏ.சி. இயந்திரத்தை பழுகு நீக்கும் பணியில் மாம்பலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (51), எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கிரிஷ்குமாா் (52), பாலமுருகன் (40), ஆனந்த முருகன் (25) ஆகிய 4 போ் ஈடுபட்டிருந்தனா்.
அங்கு ஏ.சி.யின் கம்ப்ரசருக்கு வாயு நிரப்பும்போது, அவா்கள் எடுத்து வந்த சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறி பயங்கர சத்ததுடன் வெடித்து தீப் பிடித்து எரிந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். மேலும் 4 பேரும் தீயில் சிக்கி காயமடைந்தனா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த உணவக ஊழியா்கள், 4 பேரையும் மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எஸ்ஆா்எம்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.