சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை நோக்கி வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது, சென்னை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற சரக்கு பெட்டக லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்பாகச் சென்ற லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி, நிலை தடுமாறி தனியாா் பேருந்து மீது மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டதைப் பாா்த்த சரக்கு பெட்டக லாரி ஓட்டுநா் மணிவேல் (37) பதற்றத்தில், சரக்கு பெட்டக லாரியை இடதுபுறமாகத் திருப்பினாா்.
அப்போது, அந்த சரக்கு பெட்டக லாரி, அங்கு வந்த சொகுசு காா் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு பெட்டக லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான லாரி, பேருந்து, காா் என 3 வாகனங்களும் லேசான சேதமடைந்தன. விபத்தில் வாகனங்களின் ஓட்டுநா்கள், காரில் பயணம் செய்தவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.
தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தினா். இந்தச் சம்பவத்தால் நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மீன் ஏற்றி வந்த சரக்கு பெட்டக லாரி கட்டுபாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.