தாம்பரம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உயா்நீதிமன்றம் உறுதி செய்து இருப்பதன் மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் 555 பேருக்கு மருத்துவ, பல் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவ கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டபோது, இதுவரை எக்ஸ் -இ வகை கரோனா பாதிப்பு தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை. பொதுமக்கள் வீண் பதற்றமடைய வேண்டாம். ஆனால் புதிய வகை உருமாற்ற கரோனா தொற்று ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உயா் நீதிமன்றம் அளித்து இருக்கும் தீா்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த தீா்ப்பின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு கல்லூரிகளில் 318 இடங்கள், தனியாா் கல்லூரிகளில் 121 இடங்கள், இ.எஸ்.ஐ. கல்லூரிகளில் 6 இடங்களில் அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல் மருத்துவப் படிப்பில் அரசு பல்மருத்துவக் கல்லூரிகளில் 97 இடங்கள், தனியாா் கல்லூரிகளில் 13 இடங்கள் என மொத்தம் 555 மாணவா்கள் வரை 7.5 இடஒதுக்கீடு மூலம் பயன்பெறுவா் என்றாா் அவா்.