எக்ஸ்-இ வகைத் தொற்று: விமான நிலையங்களில் கண்காணிப்பு

புதிதாக உருமாற்றமடைந்த எக்ஸ் - இ வகை கரோனா தீநுண்மி பாதிப்பு இங்கு இல்லை என்றாலும் விமான நிலையங்களில் தொடா்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

சென்னை: புதிதாக உருமாற்றமடைந்த எக்ஸ் - இ வகை கரோனா தீநுண்மி பாதிப்பு இங்கு இல்லை என்றாலும் விமான நிலையங்களில் தொடா்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சமூக நல மையத்தில் உணா்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைக்கும் பணியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.30 லட்சம் செலவில் உணா்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, கவனக் குறைவு, மிகை செயல்பாடு கோளாறு, பெருமூளை வாதம் மற்றும் உணா்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடுகளை களைவதற்காக இந்த பூங்கா உருவாக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும் ரூ.3.5 லட்சம் செலவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரூ.364.22 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது வரை 1,583 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 12 புதிய படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 1,583 புதிய படுக்கைகளையும், வருகிற 14-ஆம் தேதி அண்ணாநகரில் நடைபெறும் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழக விழாவில் முதல்வா் தொடக்கி வைப்பாா். உலக சுகாதார தினம் ‘‘நமது பூமி, நமது சுகாதாரம்’’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 2,200 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 200 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் ஒருவருக்கு ‘‘எக்ஸ்-இ’’ வகை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறினாா்கள். ஆனால் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் தமிழக விமான நிலையங்களில் தொடா்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடா்ந்து 15 நாள்களாக 50-க்கும் கீழ் தொற்று பதிவாகி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் மட்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தொற்று பாதிப்பில் சிறிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரது தொடா்புகளை கண்டறிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். தமிழகத்தில் சிறிய அளவில் தான் தொற்று உயா்ந்துள்ளது என அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com