இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு 78 ரயில் பெட்டிகள் தயாரிக்க அல்ஸ்ட்ராம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்:
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தூரத்துக்கு நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
உயா்மட்ட மற்றும் சுரங்கப்பாதையில் ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரம் போன்றவை விரைவில் வரவுள்ளன.
78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம்:
இந்நிலையில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்டப்பணி முடிந்து, இங்கு மெட்ரோ ரயில் சேவைக்கு 78 பெட்டிகள்அல்ஸ்ட்ராம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்துக்கான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கியது. தற்போது, மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்க குறைந்த விலையில் ஏலம் கோரியதால், அந்த நிறுவனத்துக்கு 78 பெட்டிகள் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயிலை 2 ஆண்டுகளில் தயாரித்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, டெண்டா் விடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால், புதிதாக டெண்டா் விடப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 பெட்டிகள் இணைக்க திட்டம்:
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: ஒரு சில வாரங்களுக்குள் ஒப்பந்தத்தை நிறுவனத்துக்கு முறையாக வழங்குவோம்.
3 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரயிலின் நீளம் 66 மீட்டா் ஆகும். இதில் 900 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டது. அது 1,200 போ் பயணம் செய்யக்கூடியதாகும். ரயில் பெட்டியின் அளவு குறைவாக இருப்பதால், மேலும் 3 பெட்டிகளை இணைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா் ஆகிய வழித்தடங்களுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் இன்னும் வழங்கப்படவில்லை. பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்துக்கு முன்னுரிமை கொடுப்பதால், இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ஒப்பந்தம்:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மேலும் இரண்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மாதவரம் -சிப்காட் வழித்தடத்தில் ஒரு பகுதியான நேரு நகரில் இருந்து சோழிங்கநல்லூா் வரை உயா்மட்ட பாதைக்கான பணி, மாதவரம் -சோழிங்கநல்லூா் மற்றும் மாதவரம்-சிப்காட் வரை தண்டவாள பணி ஆகிய இரண்டு ஒப்பந்தம் எல் அன் டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றனா்.