பெஞ்சமின் சூல்ட்சேவின் ஆய்வுக் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார். இதனை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூல் 18-ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு, சமூக அமைப்பு, ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றை ய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும், சூழலையும் அறிந்துகொள்ள இந்த நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கிறது.
மெட்ராஸ் நகரில் 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள், கடை வீதிகள், ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள், ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு, பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், உள்ளூர் மக்களைப் பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் ஆகியவை குறித்துப் பேசுகிறது.
ஐரோப்பாவில் இருந்து கப்பலில் சென்னை வந்து சேர குறைந்தது நான்கு மாதங்களுக்கும் மேலான பயணக் காலம் தேவைப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே உலகின் எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் சென்னையில் வாழ்ந்திருக்கின்றனர்.
முத்தியால் பேட்டை மற்றும் பெத்தநாயக்கன் பேட்டை பகுதிகளில் நிறைய தோட்டங்கள் இருந்துள்ளன. பல்வேறு பண்பாட்டினர் கூடுமிடமாகவும், வணிகத்தின் தலைமை நகராகவும் விளங்கியதால் அக்காலத்திலேயே ஒரு பெருநகரம் என்பதன் அறிகுறியாக சென்னையில் 23 மொழிகள் பேசப்பட்டுள்ள நிலை இருந்திருக்கிறது போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன. 18- ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை விரிவாகவும், தெளிவாகவும் பதிவு செய்கிறது "மெட்ராஸ் 1726' . மொத்தம் 216 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.250.