முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கரோனா நோயாளி மருத்துவமனையில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை
By DIN | Published On : 17th January 2022 08:29 PM | Last Updated : 17th January 2022 08:29 PM | அ+அ அ- |

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கரோனா நோயாளி மருத்துவமனையில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
கீழ்ப்பாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் உதவி மேலாளராக கேரளத்தைச் சேர்ந்த மோ. சந்தீப் (29) என்பவர் 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். சந்தீப் சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சந்தீப், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சந்தீப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக திங்கள்கிழமை செவிலியர்கள், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர். அப்போது அங்கு சந்தீப், தனது இடது கையில் ஊசியை செலுத்திய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம், காவல்துறைக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று சந்தீப் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். முதல் கட்ட விசாரணையில் சந்தீப், கையில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கரோனா மீதான பயத்தினால் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.