காவல் துறை புகாா் ஆணையம்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் இறுதி அவகாசம்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் துறை புகாா் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயா் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல் துறை புகாா் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக தமிழக அரசு தெரிவிக்க சென்னை உயா் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.

காவல் துறை சித்ரவதை, சிறைச்சாலை மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகாா்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகாா் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீா்த்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகாா்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகாா் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

மாநில அளவில் உள்துறைச் செயலாளா் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோா் உறுப்பினா்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் காவல் கண்காணிப்பாளா் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா்கள் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

இது, உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளா் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகாா் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூா்த்தி என்பவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்திருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபா்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினா். உள்துறைச் செயலாளா், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் ஆட்சியா், காவல்துறை எஸ்பி அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினா்.

உயா் அதிகாரிகளுக்கு எதிராக புகாா்கள் வந்தால் அவா்களே எப்படி விசாரிப்பாா்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், புகாா் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனா். சட்டத்தில் திருத்தம் செய்வது தொடா்பாக அரசு தெரிவிப்பதற்கு இறுதி அவகாசம் வழங்கி வழக்கை ஒருநாள் (ஜூன் 10-க்கு) தள்ளிவைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com