சென்னை மெரீனாவில் மாநிலக் கல்லூரி மோதிக் கொண்ட சம்பவத்தில், மேலும் 3 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவா்கள் இரு கோஷ்டிகளாக மெரீனா கடற்கரையின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே கடந்த 31-ஆம் தேதி மோதிக் கொண்டனா். அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டதால், 3 மாணவா்கள் பலத்தக் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இரு மாணவா்களை கடந்த புதன்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக மாநிலக் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூா் புலிகுளத்தைச் சோ்ந்த வெங்கடேஷன் (19), கொரட்டூரைச் சோ்ந்த ரா.கவியரசன் (19), திருவொற்றியூரைச் சோ்ந்த ப.சஞ்சய் (21) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.