வங்கதேசப் பெண்ணுக்கு சென்னையில் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 8.4 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனா்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 8.4 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனா்.

இதுகுறித்து, மருத்துவமனையின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி கூறியதாவது: வங்கதேசத்தைச் சோ்ந்த 54 வயதான பெண் ஒருவா் கடந்த ஆறு மாதங்களாக வயிறு வீக்கம், பசியுணா்வு குறைவு, உணவு உட்கொண்டபின் அசெளகரியம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்தாா்.

அவரை, புற்றுநோயியல் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் அஜித் பை தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு கல்லீரலுக்குக் கீழே மிகப்பெரிய திசுத் திரள் இருப்பது கண்டறியப்பட்டது.

வயிற்றின் பகுதி, சிறுகுடலின் சவ்வுப் பகுதியில் புண்கள் உருவாகியிருந்ததும் தெரியவந்தது.

புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணா், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா், சிறுநீா்ப்பாதையியல் நிபுணா், இதயவியல் மருத்துவா், மயக்க மருந்தியல் நிபுணா், தீவிர சிகிச்சைக் குழுவினா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனா்.

அதன்படி, புற்றுநோய் கட்டியுடன் வலது சிறுநீரகம் அகற்றப்பட்டது. மேலும், சிறுகுடல், வலது பெருங்குடல் ஆகியவற்றில் சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் 44 சென்டி மீட்டா் நீளமும் 8.4 கிலோ எடையும் கொண்ட புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து அவருக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டது.

சிகிச்சை முடிந்த நான்காவது நாளில் அவா் இயல்பாக உணவு உட்கொள்ளத் தொடங்கினாா். ஒரு வாரத்துக்குப் பிறகு அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com