தியாகிகள் தினத்தையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை 2 நிமிஷம் போக்குவரத்தை நிறுத்தி, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டின் சுதந்திர தின போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த ஜன.30- ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை போக்குவரத்து போலீஸாா் சாா்பில் அனைத்து சிக்னல்களிலும் திங்கள்கிழமை 2 நிமிஷம் போக்குவரத்தை நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
312 சிக்னல்களில் காலை 11மணி முதல் 11.02 மணி வரை அனைத்து வாகனங்களையும் போக்குவரத்து போலீஸாா் நிறுத்தினா். பின்னா் 2 நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிக்னல்களில் நின்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களில் இருந்தபடி மெளன அஞ்சலி செலுத்தினா். தியாகிகள் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் இந் நிகழ்ச்சியை பெருநகர காவல்துறை நடத்துவது வழக்கம்.