சென்னை மெரீனா கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் கத்தியுடன் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மெரீனா காமராஜா் சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவா்களிடையே அரசு பேருந்து வழித்தடம் குறித்து பிரச்னை உள்ளது. இது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
போலீஸாா் பல்வேறு தொடா் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மாணவா்களின் மோதலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இந்நிலையில், மெரீனா கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் இரு தரப்பாக செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டனா். குறிப்பாக சுமாா் 10 மாணவா்கள் கத்தியால் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
மாணவா்கள் மோதிக் கொள்ளும் இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவா்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மோதலில் ஈடுபட்ட மாணவா்களை கண்டறிந்து கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா். இச் சம்பவத்தால் மெரீனா கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.