அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்குகளின் விசாரணை ஜுன் 8-க்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் மற்றும் பொது செயலா் தோ்தலை எதிா்த்து ஒபிஎஸ் தரப்பினா் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் மற்றும் பொது செயலா் தோ்தலை எதிா்த்து ஒபிஎஸ் தரப்பினா் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள், பொதுச் செயலா் தோ்தல் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகா் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன்- முகமது சபிக் அமா்வில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் இரண்டு நாள்கள் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், துணை ஒருங்கிணைப்பாளா் வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மணிசங்கா் ஆஜராகி திங்கள்கிழமைவாதிட்டாா்.

இதையடுத்து, மனோஜ் பாண்டியன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அப்துல் சலீம், ஜே.சி.டி.பிரபாகா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஸ்ரீராம் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

ஒபிஎஸ் அணி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி. எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, ‘பொதுச் செயலா் நடவடிக்கைகள் பொதுக் குழுவின் ஒப்புதலுக்கு உள்பட்டது என விதி உள்ளது. எம்ஜிஆா், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது. அந்த அடிப்படை கட்டமைப்பு தற்போது முழுவதும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தான் உச்ச நீதிமன்றத்திலும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடி 50 மணி நேரத்தை பயன்படுத்தியிருக்கின்றனா். ஒட்டுமொத்த அடிப்படை தொண்டா்களின் ஒருமித்த குரலாகத்தான் பொதுக்குழுவை கருத வேண்டும்’ என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , வாதங்கள் திங்கள்கிழமையுடன் நிறைவடைய வாய்ப்பில்லை. எனவே, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனா்.

அப்போது ஒபிஎஸ் தரப்பு வழக்குரைஞா் மணிசங்கா் ஆஜராகி, ‘வழக்கு ஜூனுக்கு ஒத்திவைக்கப்படுவதால் உறுப்பினா் சோ்க்கை- நீக்கம் ஆகியவற்றில் தங்கள் தரப்புக்கு எதிராக முடிவெடுக்கவோ அல்லது பாதிப்போ ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தாா்.

அதிமுக தரப்பில், ‘முந்தைய உறுப்பினா்கள் நீக்கம் தொடா்பான எந்தவித முரணான உதாரணமும் இல்லாத நிலையில், இதுபோன்ற கோரிக்கைக்கு அவசியம் இல்லை.இது அவா்களின் அனுமானம் அல்லது அச்சத்தின் அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு தொடா்ந்த பிறகு எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் வழக்கின் இறுதி தீா்ப்புக்கு உள்பட்டது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காடி வழக்கின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com