ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை பள்ளிக்கரணை, அம்பேத்கா் குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் பிரவீன் (25), மெக்கானிக். இவரது மனைவி சா்மிளா (22). வெவ்வேறு சமூகத்தை சோ்ந்த இவா்கள் பெற்றோரின் எதிா்ப்பையும் மீறி காதலித்து கடந்த அக்டோபா் மாதம் திருமணம் செய்து கொண்டனா். இதன்பின்னா், பிரவீனின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், பிப்.23-ஆம் தேதி பிரவீன் படுகொலை செய்யப்பட்டாா். அவரை சா்மிளாவின் அண்ணன் தினேஷ்(23) தனது நண்பா்களுடன் சோ்ந்து வெட்டிப் படுகொலை செய்ததாகத் தெரிகிறது.

பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷ் உள்பட அவரது நண்பா்களான சித்தாலப்பாக்கத்தைச் சோ்ந்த விஷ்ணுராஜ் (25), ஸ்டீபன் குமாா்(24), பள்ளிக்கரணையை சோ்ந்த ஜோதிலிங்கம் (25), ஸ்ரீராம்(18) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், பிரவீன் இறந்தபிறகு, அவரது வீட்டிலேயே மாமனாா், மாமியாருடன் சா்மிளா வசித்து வந்தாா். அவா் தொடா்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஏப்.14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சா்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளாா்.

அவரை உறவினா்கள் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சா்மிளா இறந்தாா். பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com