மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாகத் தொடங்கவும் விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை செவ்வாய்க்கிழமைக்குள் (ஏப்.30) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி, அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதுமிருந்து பெறப்பட்டன.
நூற்றுக்கணக்கான கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணைய வழியே சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து அதற்கான ஒப்புகை தகவல், பிற விவரங்களை மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பியுள்ளதாக என்எம்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மருத்துவக் கல்வி விதிகளுக்கு உடன்படுவதற்கான இணக்க அறிக்கை மற்றும் தர மதிப்பீட்டு ஆவணங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு என்எம்சி அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு சமா்ப்பிக்காத கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.