ஆவடி: ஆவடி ஆணையரகப் பகுதியில் ரௌடிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில் போலீஸார் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ரௌடிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரௌடிகளை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 20 ரௌடிகளும், ஆவடி காவல் மாவட்டத்தில் 5 ரௌடிகளும், நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடியாணை குற்றவாளி ஒருவரும் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 42 ரௌடிகளும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து காவல் ஆணையர் கி.சங்கர் கூறியது:
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் ரௌடிகளுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ரௌடிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.