கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலில் எவ்வித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவது ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை எனப்படுகிறது. அதன்படி, கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி, ஞாயிறு (மே 4, 5) ‘கள்ளக் கடல்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி ‘சிவப்பு’ எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை அண்மையில் விடுத்தன.

இந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தளா்த்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விடுக்கப்பட்டிருந்த இந்த எச்சரிக்கை, திங்கள்கிழமை (மே 6) மாலை வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய கடல்சாா் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மீனவா்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

மேலும், கடற்கரைகளில் அபாய பகுதிகளிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com